தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்னழுத்தக் குறைபாடு (Voltage Problem) தொடர்பாக ஆளும் தமிழக வெற்றி கழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். காற்றாலை மின் உற்பத்தி சரிவடைந்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் காரணங்கள் கூறப்படும் நிலையில், மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலையில் அரசு இயங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டினாலும், சீரற்ற மின் விநியோகத்தினாலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதைக் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரப் பற்றாக்குறையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளதையும், ஊடகச் செய்திகளை மேற்கோள் காட்டி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், மின்சாரத் துறை அமைச்சர் இந்த அவசியமான பிரச்சினையைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், தேவையற்ற அவதூறுகளையும் கருத்துகளையும் பேசி திசைதிருப்ப முயல்வதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். மின்சார விநியோகம் மற்றும் ஆவின் பால் விநியோகம் போன்ற மிக முக்கியமான, அன்றாட அடிப்படைத் தேவைகளையே மக்களுக்குச் சரியாக வழங்க முடியாமல் தவெக அரசு திண்டாடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, மக்களைப் பாதிக்கும் உண்மைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் வேலைகளை ஆளும் தவெக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் அவதியை உணர்ந்து, “ப்யூஸ் போன” அரசு உடனடியாக மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் நலனில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
