தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்லும் நேர்மையானவர் செந்தில்குமார் என்றும், தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் உறுதி அளித்தார். திமுக அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்ட அவர், பாலக்கோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுக தரப்பை விமர்சித்துப் பேசிய உதயநிதி, கடந்த 25 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் கே.பி.அன்பழகன் தொகுதிக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அவர் மீது பத்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் சிறைக்குச் செல்வது உறுதி என்றும் பரபரப்பாகப் பேசினார். திமுகவின் வெற்றிப் பயணம் இந்தப் பாலக்கோடு தொகுதியிலிருந்தே தொடங்கும் எனத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினரின் ஊழல்களை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக்காட்டினார்.
