“விரைவில் ஐட்டம் சாங் போடுவாங்க போல!” சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்.. உதயநிதி அதிரடி குற்றச்சாட்டு…!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குட்டி கதை சொன்னது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தற்போதைய சட்டமன்றம் ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றப்பட்டுவிட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் செயல்பாடுகள் விஜய் பட ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பாணியில் இருப்பதாகவும், சட்டமன்றத்தையே ஒரு தியேட்டர் போல மாற்றிவிட்டதால் அங்கு விசில் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும் சாடினார். மேலும், அமைச்சர்கள் நடனமாடுவதும், சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே இவை செய்யப்படுவதாகவும், இன்றைய முதலமைச்சரின் பேச்சில் இருந்து மட்டுமே 10 ரீல்ஸ்கள் (Reels) தேறும் என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தது குறித்துப் பேசிய அவர், தங்களால் ஓரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று விளக்கமளித்தார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அதற்கு சபாநாயகர் ‘ஆக்‌ஷன்’ சொல்கிறார் என்றும், இதே நிலை நீடித்தால் விரைவில் சட்டசபைக்கு கேரவேன் (Caravan) கூட வந்துவிடும் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், பேரவையில் விரைவில் ‘ஐட்டம் சாங்’ போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், சபாநாயகரே ஆக்‌ஷன், கட் எல்லாம் சொல்லும் இயக்குநராக மாறிவிட்டார் என்றும் விமர்சித்தார்.

   

சட்டமன்றப் பேரவையை பொதுக்கூட்ட மேடையிலோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலோ பேசுவதைப் போல மாற்றிவிட்டதாகக் கூறிய உதயநிதி, அவர்கள் இஷ்டத்திற்குப் பேசுவதை எல்லாம் தாங்கள் சகித்துக்கொண்டு கேட்க முடியாது என்று தெரிவித்தார். “உங்களை யாராவது கெட்ட வார்த்தை பேசி கோபப்படுத்தினால் உங்களால் எப்படி அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருக்க முடியுமோ, அப்படித்தான் இதுவும்” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், தங்களின் வெளிநடப்பு நியாயமானது என்பதை உணர்த்தும் வகையில் ஆவேசமாகப் பதிலளித்தார்.