பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ‘ஓபெக்’ (OPEC) இல் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியாக வெளியேறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இந்த அமைப்பில் நீடித்த அமீரகம், தற்போது தனது கச்சா எண்ணெய் உற்பத்தி திறனை முழுமையாகப் பயன்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளது. 2027-ஆம் ஆண்டிற்குள் தினசரி 5 மில்லியன் பேரல் உற்பத்தியை எட்ட அமீரகம் திட்டமிட்டிருந்த நிலையில், ஓபெக் விதித்த கட்டுப்பாடுகள் அதற்கு தடையாக இருந்தன. இந்த வெளியேற்றத்தின் மூலம், இனி ஓபெக் நாடுகளின் நிபந்தனையின்றி அமீரகம் சுதந்திரமாக கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த முடியும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வருவது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் புள்ளியான இந்த ஜலசந்தியை ஈரான் மூட முயற்சிப்பதும், அமெரிக்காவின் தலையீடும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வரத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அமீரகத்தின் வெளியேற்றம் இந்தியாவிற்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவு இந்தியாவிற்கு ஒரு ‘ஜாக்பாட்’ என்றே கருதப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 10 சதவீதத்தை அமீரகம் பூர்த்தி செய்கிறது. இனி அந்நாடு கூடுதலாக எண்ணெயை உற்பத்தி செய்யும்போது, அதன் முதல் பலன் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவிற்கே கிடைக்கும். இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, தடையற்ற எரிபொருள் விநியோகத்திற்கும் வழிவகை பிறந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் போர்ப்பதற்றத்தை தவிர்க்க, அமீரகம் ஏற்கனவே ‘ஃபுஜைரா’ (Fujairah) குழாய் வழிப்பாதையை திறம்பட பயன்படுத்தி வருகிறது. அபுதாபியின் ஹப்ஷான் வயல்களில் இருந்து ஃபுஜைரா துறைமுகம் வரை 406 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த தரைவழி குழாய்கள் மூலம், ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடாமலேயே அரபிக்கடல் வழியாக இந்தியாவிற்கு எண்ணெய் கொண்டு வர முடியும். ஓபெக் கட்டுப்பாடுகள் நீங்கியுள்ளதால், இனி இந்த ஃபுஜைரா பாதை வழியாக இந்தியா கூடுதல் கச்சா எண்ணெயைப் பெற வாய்ப்புள்ளது.
தற்போது இந்த குழாய் வழிப்பாதை மூலம் தினசரி 1.5 மில்லியன் பேரல் எண்ணெய் விநியோகம் செய்ய முடியும். அமீரகத்தின் இந்த அதிரடி மாற்றத்தால், இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகம் 200 பில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி வேகமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கவும், குறைந்த செலவில் தடையின்றி எரிபொருளைப் பெறவும் அமீரகத்தின் இந்த வெளியேற்றம் இந்தியாவிற்கு ஒரு பெரிய பொருளாதார பலமாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
