தெலுங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும், அவரது மனைவி சுவாதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சுவாதி தனது இளைய மகனுடன் தாய் வீட்டிற்குச் செல்ல, 2 வயது மூத்த மகள் மேகனா தந்தை ரவியுடன் தங்கியிருந்துள்ளார். இவர்களது குடும்பப் பிரச்சனை தொடர்பாகப் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்துள்ளன.
இந்தச் சூழலில், போலீசார் மற்றும் உறவினர்கள் தன்னைத் தனது மகளிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ரவி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது மகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்ட அவர், சப்போட்டா பழத்தில் விஷம் கலந்து 2 வயதுக் குழந்தைக்குக் கொடுத்துள்ளார். தந்தை ஆசையாகக் கொடுக்கிறார் என்று தெரியாமல் அந்தப் பிஞ்சு குழந்தை அந்தப் பழத்தைச் சாப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, சிறுமி மேகனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ரவியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இந்த விபரீத சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு ஒரு குழந்தையின் உயிரைப் பறித்ததோடு, ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
