ஹைதராபாத்தின் கர்மிா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 17 வயது சிறுவன் ஓட்டி வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில், தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், தெருவோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி பலத்த சேதமடைந்தன.
விபத்து ஏற்படுத்திய அந்த ஆடம்பர கார், முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத அந்த சிறுவனால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதே இந்த விபத்துக்கு முதன்மை காரணம் என கூறப்படுகிறது. காயம் அடைந்த சகோதரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/NewsMeter_In/status/2083863485394657716/video/1
இச்சம்பவம் குறித்து மதுரா நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைனர் சிறுவனுக்கு காரை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் மீதும், சிறுவனின் பெற்றோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
