தஞ்சை பிள்ளையார்பட்டி – திருவையாறு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ள திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மண்டபத்தின் அருகே இரும்பு குழாய்களில் திமுக கொடிக்கம்பங்களை நடும் பணியில் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் (45) மற்றும் கோகுல் (29) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் கையில் இருந்த இரும்பு குழாய் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அங்கிருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழா முன்னேற்பாட்டில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
