தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் விரைவில் பார்க்க உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும் கரூர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அனுமதி கிடைத்ததும் விஜய் கரூர் செல்வார் எனவும் தெரிவித்தார். அதே சமயம் அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கொடி இருப்பது குறித்த கேள்விக்கு, விரிவாக நாம் பேசுவோம் என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு சென்றார். அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர உள்ளது குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் பட்சத்தில் நிர்மல் குமார் எந்த பதிலும் அளிக்காமல் ஒரே வார்த்தையில் பதில் அளித்து சென்றது புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
