“ஆட்சிக்கு வந்து 1 மாதம் கூட ஆகல.. அதுக்குள்ளே கட்டப்பஞ்சாயத்தா?”… ஒரு லட்ச ரூபாய் மாமுல்… தவெக ஒன்றிய செயலாளரின் பகிரங்க மிரட்டல்…!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் “மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற ஒற்றை முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்டு, பிரமாண்ட வெற்றியின் மூலம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள்ளாகவே, கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் சிலர் செய்யும் அத்துமீறல்களும் கட்டப்பஞ்சாயத்துகளும் தவெக ஆட்சிக்கு பெரும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது பொதுமக்களிடையேயும், நடுநிலையாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் கனியம்பாடி பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தவெக ஒன்றிய செயலாளர் ஒருவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக இத்தொழிலைச் செய்து வரும் தங்களை, “மாதம் ஒரு லட்சம் பணம் தராவிட்டால் தொழிலை நடத்த விடமாட்டோம்” என்று அந்த நிர்வாகி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பொறுப்பிற்கு வர தான் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும், மேலிடத்து உத்தரவின் பேரில்தான் இதைச் செய்வதாகவும் கூறி அவர் மிரட்டியதாகக் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

   

வேலூரில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெகவினர் இது போன்ற கட்டப்பஞ்சாயத்து மற்றும் மாமுல் வசூல் விவகாரங்களில் தொடர்ந்து சிக்கி வருவதாகப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்று 30 நாட்கள் கூட ஆகாத சூழ்நிலையில், ஒரு சில நிர்வாகிகளின் இத்தகைய அராஜகப் போக்குகள், கட்சியின் பெயரைக் கெடுப்பதுடன் உழைக்கும் வர்க்கத்தினரிடையே தவெக அரசின் மீது கடும் அதிருப்தியையும், பயத்தையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது. மிரட்டலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

எனவே, ‘மாற்றம்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதைச் செயலில் காட்டும் முதலமைச்சராக விஜய் திகழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் இத்தகைய நபர்கள் மீது தவெக தலைமை எவ்வித சமரசமும் இன்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டல் கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே, வணிகர்களும் பொதுமக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை இந்த ஆட்சியில் உருவாக்க முடியும்.