தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு விட்டன. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதே சமயம் கட்சி நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் ஜாமின் வழங்குவது தொடர்பான மனு நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில் கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவரது தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
