சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, நேற்று இரவு அயனாவரம் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெண் தொண்டர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் உடைந்த மதுபாட்டில்கள் மற்றும் கண்ணாடித் துண்டுகள் வந்து விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்ததால், கூட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இந்தச் சம்பவத்தைக் கண்டு ஆவேசமடைந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, மேடையிலேயே தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். “பெண்கள் இருக்கும் இடத்தில் கண்ணாடி பாட்டில்களை வீசுவதுதான் ஜனநாயகமா? இந்த அராஜகத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
பாட்டில் வீசப்பட்ட திசையை வைத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த ஒரு தனியார் தங்கும் விடுதியிலிருந்து (லாட்ஜ்) பாட்டில்கள் வீசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த இரண்டு நபர்களைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த போலீஸார், “குறிப்பிட்ட அந்த லாட்ஜில் தங்கியிருந்த இருவர் மதுபோதையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள மதுபாட்டில்களை வீசியபோது, அது தவறுதலாக ஜன்னல் வழியாக வெளியேறி பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் விழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது போதையில் நடந்த விபத்தா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
