தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்துள்ள சூழலில், இதுவரை 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுத் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் பதவியேற்பு விழா முடிந்தும் இலாகாக்கள் ஒதுக்கப்படுவதில் தாமதம் நீடித்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று பணிகளைத் தொடங்கினர்; குறிப்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் அறைகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இப்புதிய அமைச்சரவையில் தவெகவின் முக்கிய முகமான ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக, இத்துறையை அவரே முதலமைச்சரிடம் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முறைப்படி தனது பணிகளைத் தொடங்கினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, முந்தைய திமுக ஆட்சியில் முன்னாள் துணை முதலமைச்சராகவும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய அதே அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு வந்த ஆதவ் அர்ஜுனா, உடனடியாகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார். முந்தைய அரசு பாதியில் நிறுத்தியுள்ள திட்டங்களின் நிலை, அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தவெகவின் புதிய தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் களம் கண்ட ஆதவ் அர்ஜுனா, சுமார் 66,400 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை விடச் சுமார் 17,300 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்தார். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
