“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாபிக் ஜான் ஆரோக்கியசாமியின் நேரடி அரசியல் என்ட்ரி தான். இதுவரை கட்சியின் முதன்மை அரசியல் வியூக வகுப்பாளராக திரைமறைவில் மட்டுமே செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு, விஜய்யின் அமைச்சரவையில் முக்கிய இடத்தைப் பிடிப்பதே அவரது தற்போதைய பிரதான இலக்கு என அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு வரை பொது மேடைகளிலோ அல்லது கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களிலோ ஜான் ஆரோக்கியசாமியின் முகம் பெரிய அளவில் தென்பட்டதில்லை. ஆனால், சமீப நாட்களாக தவெகவின் மிக முக்கியமான உள்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசு சார்ந்த கூட்டங்களில் அவர் தொடர்ச்சியாகத் தோன்றி வருகிறார். அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டங்களிலேயே ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றதாகக் கூறி, எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாஜக தரப்பில் ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகாரே வாசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் என்ட்ரியின் பின்னணியில், இடைத்தேர்தல் மூலமாக நிதித்துறை, உள்துறை அல்லது தொழில்துறை போன்ற ஒரு சக்திவாய்ந்த இலாகாவைக் கைப்பற்றும் மெகா பிளான் இருப்பதாக தவெகவின் நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர்.

   

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதால், வரவிருக்கும் இடைத்தேர்தல் அதற்கு மிகச்சரியான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்டு வென்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். மேலும், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களான எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி. சத்யாபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசிமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலி இடங்களும் உள்ளன. இவற்றுள் தவெகவுக்கு அதீத செல்வாக்குள்ள ஒரு தொகுதியில் ஜான் ஆரோக்கியசாமியை நிறுத்த கட்சித் தலைமை திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

இருப்பினும், ஜான் ஆரோக்கியசாமியின் இந்தத் திடீர் விஸ்வரூபம் தவெகவிற்குள் அத்தனை சுலபமாக நடப்பதாகத் தெரியவில்லை; கட்சிக்குள்ளேயே இதற்கு கடும் முட்டுக்கட்டைகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக, தேர்தல் பணிகளில் முக்கியப் பங்காற்றிய மூத்த தலைவர்களின் ஆதரவாளர் வட்டாரங்கள், “தேர்தல் நேரத்தில் திரைமறைவில் வியூகம் அமைத்துக் கொடுத்த ஒருவருக்கு நேரடியாக கேபினட் அந்தஸ்து கொடுப்பது நியாயமல்ல; இது ஆரம்பத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை அவமதிக்கும் செயல்” என்று தங்களின் அதிருப்தியைப் புகைய விட்டுள்ளனர். இந்த உள்கட்சி அழுத்தங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி, ஜான் ஆரோக்கியசாமியை விஜய் அமைச்சராக்குவாரா அல்லது உள்கட்சி அமைதிக்காக இந்த முடிவு தள்ளிப்போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.