தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன் மது அருந்திவிட்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது அதிர்ச்சியளிப்பதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தவெக தரப்பினர், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்றும், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் கூறி மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருவதால், புதிய எம்.எல்.ஏ-வின் இத்தகைய செயல் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மக்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பே இத்தகைய சர்ச்சையில் தவெக வேட்பாளர் சிக்கியுள்ளது அக்கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
