அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “விஜய் எங்களுக்கு மாமனா, மச்சானா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காமராஜ் அவ்வாறு கடிதம் எதுவும் அளிக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அந்த கடிதம் முற்றிலும் போலியானது என்றும் விளக்கமளித்துள்ளார். இந்தக் கடிதத்தை வெளியிட்டது யார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த போலி கடிதம் வெளியான செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தினகரன் தெரிவித்துள்ளார். “யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்று சாடிய அவர், அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். இதற்கிடையில், மெரினாவில் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவலால் கடற்கரைச் சாலையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு ஒருவித பதற்றம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
