ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ் (22538) ரயிலில் கசரா-இகத்புரி இடையே பயணம் செய்த ஒரு பெண்ணுக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ஆர்.எஸ். டெலி, உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு சகோதரனைப் போலத் துணையாக நின்று, ரயிலிலேயே பாதுகாப்பான பிரசவம் நடக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
இந்த இக்கட்டான சூழலில், ரயிலில் பயணித்த செவிலியர் பூஜா கார்கேவின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டது. உரிய நேரத்தில் கிடைத்த உதவியால், அந்தப் பெண் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். டிக்கெட் பரிசோதிக்கும் தனது வழக்கமான பணியைத் தாண்டி, ஒரு உயிரைக் காக்க அவர் காட்டிய அர்ப்பணிப்பைப் புசாவல் கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தனது ‘எக்ஸ்’ தளத்தில் மனதாரப் பாராட்டியுள்ளார். இந்திய ரயில்வேயின் ‘பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்பு’ என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் செய்தியைப் படித்த சமூக வலைதளப் பயனர்கள், அந்த அதிகாரியின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வருகின்றனர். “டிக்கெட் எடுப்பது மட்டுமல்ல, உயிரைக் காப்பதும் இவர்களின் கடமையாகிவிட்டது” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கழிவறையில் விழுந்த மோதிரத்தை ரயில்வே ஊழியர்கள் மீட்டுக் கொடுத்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த ‘ரயில் பிரசவம்’ ரயில்வே துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
