120 மீட்டர் சுற்றளவே சாம்பலாகும்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த மரண மாஸ் வார்னிங்… உலகையே உலுக்கிய ‘மார்க் 84’ குண்டின் ரகசியம்.. ட்ரூத் சோஷியலில் வெளியான அந்த போட்டோ…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து முழுமையாகப் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கப் போர் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ள ‘மார்க் 84’ (MK-84) என்ற பிரம்மாண்ட வெடிகுண்டின் புகைப்படமே அது. அதில், டிரம்பின் பிரபலமான வாசகமான “Thank you for your attention to this matter” (இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி) என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பையும், ஈரான் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) என்று அழைக்கப்படும் இந்த மார்க் 84 குண்டு, சுமார் 900 கிலோ (2,000 பவுண்ட்) எடையைக் கொண்டது. தடிமனான கான்கிரீட் மற்றும் இரும்புச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து வெடிக்கும் அதிபயங்கரத் திறன் இதற்கு உண்டு. சுமார் 945 பவுண்ட் உயர் வெடிபொருளைக் கொண்டுள்ள இக்குண்டு தரையில் விழுந்தால், 15 மீட்டர் ஆழத்திற்குப் பெரிய குழி உருவாவதுடன், 120 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தையும் சாம்பலாக்கிவிடும். வியட்நாம் போர் காலம் தொட்டே அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் இக்குண்டு, குறைவான செலவில் மிக மோசமான உள்கட்டமைப்புச் சேதங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.

   

இந்தப் புகைப்படம் தற்செயலாக வெளியிடப்பட்ட ஒன்று அல்ல; இதன் பின்னணியில் கடுமையான அரசியல் மற்றும் போர் மிரட்டல் ஒளிந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தீவிர அழுத்தங்கள் காரணமாக, ஈரான் விதித்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த டிரம்ப், அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து அதிரடியாக வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஈரானின் அணுஉலைகள், ஏவுகணைக் தளங்கள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற முக்கிய ராணுவ மற்றும் பொது உள்கட்டமைப்புகளை எந்நேரமும் அமெரிக்காவால் தகர்க்க முடியும் என்பதை நினைவூட்டும் ஒரு நேரடி மிரட்டலாகவே இப் பதிவை டிரம்ப் வெளியிட்டுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

   

முன்னதாக, பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இக்குண்டு ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இதன் வெளிநாட்டு விற்பனைக்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தது. ஆனால், 2025-ல் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும் அந்தத் தடையை நீக்கி, சுமார் 1,800 மார்க் 84 குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதி வழங்கினார். தற்போதைய பதற்றமான சூழலில், ஈரானுக்கு எதிராகத் தனது ராணுவ வலிமையைக் காட்டும் விதமாக டிரம்ப் பகிர்ந்துள்ள இந்த வெடிகுண்டுப் புகைப்படம், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தலை உலக அரங்கில் தீவிரப்படுத்தியுள்ளது.