நடுவானில் இரண்டாகப் பிளந்த பாராசூட்… மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்… பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

வேலைப்பளு மற்றும் அன்றாட வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட்டு, மனதை லேசாக்கிக் கொள்ளவே நாம் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கிறோம். அங்கு நமக்குத் பிடித்த சாகசங்களைச் செய்து மகிழ நினைப்பது வழக்கம். ஆனால், நாம் தேடிச் சென்ற அந்த மகிழ்ச்சியான தருணமே மரண பயத்தைக் காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியொரு அதிர்ச்சியூட்டும், அதே சமயம் அசாத்தியமான மீட்புச் சம்பவம்தான் ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வடக்கு ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற பாராகிளைடிங் தலமான ஷ்மிட்டன்ஹோஹே (Schmittenhohe) மலைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை மதியம் 44 வயதான சப்ரினா என்ற அனுபவம் வாய்ந்த பெண்மணி தனது பாராகிளைடரில் ஜாலியாகப் பறந்து கொண்டிருந்தார். சாகசத் தருணங்களைப் பதிவு செய்யத் தனது ஹெல்மெட்டில் கேமராவையும் அவர் பொருத்தியிருந்தார். அதே நேரத்தில், அந்தப் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர் இயக்கிய சிறிய ரகச் சுற்றுலா விமானம் ஒன்று அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, அந்த விமானம் சப்ரினாவின் தலைக்குச் சற்று மேலே அவரது பாராகிளைடர் மீது மிக பலமாக மோதியது.

   

விமானத்தின் இறக்கைகள் மற்றும் மோட்டார் ப்ரொபெல்லர் மோதிய வேகத்தில், சப்ரினாவின் பாராகிளைடர் நடுவானில் இரண்டாகப் பிளந்து முற்றிலும் சிதைந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சப்ரினா, நொடிப் பொழுதில் தலைகீழாகப் பூமி நோக்கி அதிவேகத்தில் சுழன்றவாறே விழத் தொடங்கினார். மரணம் நிச்சயம் என்ற இக்கட்டான அந்தச் சில நொடிகளில், சப்ரினா சற்றும் பதற்றமடையாமல் தனது அசாத்திய மனவலிமையையும் அனுபவத்தையும் பயன்படுத்தினார். அவர் உடனடியாகத் தனது அவசரக்கால மாற்றுப் பாராசூட்டைத் (Emergency Parachute) திறக்க, அது கச்சிதமாக வேலை செய்து அவரது வேகத்தைக் குறைத்து பத்திரமாகத் தரையிறங்க உதவியது.

   

இந்த விபத்தில் சப்ரினா மற்றும் விமானத்தை ஓட்டிய பைலட் ஆகிய இருவருமே எவ்வித பெரிய காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து மீட்பு ஹெலிகாப்டர் மூலம் விரைந்த சால்ஸ்பர்க் போலீஸார், சப்ரினாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து சப்ரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் இன்னும் உயிருடன் இருந்து இதை எழுதுகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. உடலில் சில ரத்தக் கட்டுகள் மற்றும் தழும்புகளைத் தவிர எனக்குப் பெரிய ஆபத்து எதுவுமில்லை, கடவுளுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சப்ரினாவின் சாதுரியமும் அதிர்ஷ்டமும் தான் இன்று அவரை நம்மிடையே உயிரோடு வைத்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

🇦🇹 A paraglider collided midair with a Cessna 172 over Austria and somehow survived.

She deployed her emergency parachute seconds after impact and landed safely.

The plane pilot also managed to land safely at Zell am See Airport.pic.twitter.com/6IH7sTi3Ic— Mario Nawfal (@MarioNawfal) May 24, 2026