திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஓட்டு குடிசை கிராமத்தில் வசித்து வரும் சிவலிங்கம் (65) என்பவருடைய மனைவி விஜயா. இந்த தம்பதியினருக்கு ஆனந்தி, ஜெயலட்சுமி மற்றும் தனலட்சுமி என்ற மூன்று மகள்கள் உள்ளன. சிவலிங்கம் ஆரணி தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் உள்ள அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார்.
நேற்று காலை குடோனுக்கு இரண்டு லாரிகளின் வந்து அட்டை பெட்டிகளை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது பக்கவாட்டில் நின்ற லாரியை அதன் டிரைவர் எஞ்சினை ஆப் செய்யாமல் கீழே இறங்கி விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த லாரி திடீரென்று தானாக முன்னோக்கி நகர்ந்ததைக் கண்ட சிவலிங்கம் மற்றும் சபீர் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள் கையால் நிறுத்த முயன்றனர். அதில் சிவலிங்கம் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகப்படுத்தி லாரியின் முன்னால் இரண்டு கைகளால் தடுத்து கொண்டே நிறுத்த போராடிய சமயத்தில் அந்த லாரி நகர்ந்து கொண்டே வந்தது.
இந்நிலையில் அந்த லாரி ஆனது சிவலிங்கத்துடன் பின்னால் நின்ற லாரியில் வந்து மோதியபோது இரண்டு லாரிகள் இடையே சிக்கி அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். சபீர் உட்பட இரண்டு தொழிலாளர்களும் பக்கவாட்டில் நின்று தடுத்த நிலையில் ஒதுங்கிக் கொண்டதால் அவர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
