தமிழ் சினிமாவில் 24 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் முன்னணி நடிகையாவதற்கு முன்பே ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார்.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு இவர் மிஸ் சென்னை பட்டம் வென்றார். அதன் பின்னர் அவர் மளமளவென்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். மௌனம் பேசியதே, லேசா லேசா ஆகிய படங்கள் அவரது அறிமுகப் படங்களாக அமைந்தன.
அதன் பின்னர் அவர் நடித்த சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற, முன்னணி கதாநாயகி ஆனார். அதன் பின்னர் அவர் நடித்த கில்லி, ஆறு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், பேட்ட மற்றும் பொன்னியின் செல்வன் என பல ஹிட்களைக் கொடுத்து இன்றும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது அவர் விஜய், அஜித் ஆகிய இருவரோடும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். மாசாணி அம்மன் என்ற அம்மன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படி 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவர் தன்னுடைய ஆரம்பகாலத்தில் நான் சினிமாவுக்கே வரமாட்டேன் என உறுதியாகப் பேசியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம் மிஸ் சென்னை பட்டம் வென்றதும் யூகி சேது தொகுத்து வழங்கிய சேது தர்பார் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது யூகி சேது “மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ளீர்கள். அடுத்து என்ன சினிமாதானே… ரஹ்மான் இசையில் டான்ஸ் ஆடப் போகிறீர்களா?” எனக் கேட்க, அதற்கு த்ரிஷா “நான் கண்டிப்பாக சினிமாவுக்கு வரமாட்டேன். ஏனென்றால் அது என்னுடைய துறை இல்லை. நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
