தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம். ஆனால் அவரை கூட நிராகரித்துள்ளார்.
அதே போல பாரதிராஜாவிடம் இருந்து பல உதவி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்து தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். அதில் முக்கியமானவர்களாக பாக்யராஜ், பாலகுரு, விஜயன், மனோபாலா, பொன்வண்ணன், சீமான் என ஒரு பட்டியலே நீளும்.
இந்த வரிசையில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவராக இணைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. 16 வயதினிலே படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரவேண்டுமென ஆசைப்பட்டாராம். அதற்காக தான் எழுதி இருந்த திவ்யா என்ற திரைக்கதையையும் எடுத்து சென்று பாரதிராஜாவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அப்போது பாரதிராஜா மணிரத்னத்தை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளவில்லை. அது பற்றி பல ஆண்டுகள் கழித்து பேசிய பாரதிராஜா “மணிரத்னத்தின் திரைக்கதை முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. அது எனக்குப் புரியவே இல்லை. அதனால்தான் நான் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. அது கூட ஒருவகையில் நல்லதுதான். அவர் தனியாக வந்து பெரிய இயக்குனர் ஆகிவிட்டார்.” எனக் கூறியுள்ளார். பாரதிராஜாவிடம் மணிரத்னம் கொடுத்த திவ்யா திரைக்கதைதான் பின்னாளில் மௌன ராகம் என்ற படமாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
