சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பல நிதி நெருக்கடிகள் மற்றும் ரிலீஸ் தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானது. மே 14-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், ஒரு நாள் தாமதமாக வெளியானதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்தச் சூழலில், படம் வெளியான முதல் நாளன்று சென்னை ரோகிணி திரையரங்கிற்கு நடிகை த்ரிஷா சர்ப்ரைஸ் விசிட் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
த்ரிஷாவுடன் இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோரும் திரையரங்கிற்கு வருகை தந்தனர். படத்தின் ஆடியோ வெளியீடு உள்ளிட்ட முந்தைய விளம்பர நிகழ்ச்சிகளில் த்ரிஷா பங்கேற்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் நேரடியாக தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையரங்கில் அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
படம் தாமதமான போது ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், த்ரிஷா மற்றும் படக்குழுவினரின் இந்த வருகை அந்த ஏமாற்றத்தைப் போக்கி பெரும் கொண்டாட்டமாக மாறியது. சூர்யாவின் தம்பி கார்த்தியும் இந்த முதல் காட்சி கொண்டாட்டத்தில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஜோடி இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
