திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பி. மேரி என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். தங்களுக்குள் இருந்த நீண்ட காலக் குடும்ப நட்பைப் பயன்படுத்தி, அவசரத் தேவை எனக் கூறி பல்வேறு தவணைகளாகச் சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், குடும்பத்திற்குச் சொந்தமான 50 சவரன் தங்க நகைகளையும் தற்காலிகத் தேவைக்காக அவர்கள் வாங்கிச் சென்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தையும் நகையையும் திருப்பித் தராமல் அவர்கள் ஏமாற்றி வந்துள்ளதாக மருத்துவர் மேரி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேரில் சென்று கேட்டபோது, காயத்ரியும் அவரது கணவர் முத்துக்குமாரும் தங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக மருத்துவர் மேரி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திமுகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரின் குடும்பத்தினரே பல லட்ச ரூபாய் நகை மற்றும் பண மோசடிப் புகாரில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்திலும், அக்கட்சியினரிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசாரின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே இதன் முழு பின்னணியும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
