திருச்சி மாவட்டம் கூத்தையப்பார் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித்குமார் (38) மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவெறும்பூர் – நாவல்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம், திருச்சி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித்குமாருக்கும் அந்த மர்ம கும்பலுக்கும் இடையே ஏதேனும் தொழில் போட்டியோ அல்லது நீண்ட நாள் முன்விரோதமோ இருந்ததா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
