பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த மரக்கிளை ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார். தனியார் நிதி நிறுவன ஊழியரான சுரேஷ் என்பவர், கடன் வசூல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், மரக்கிளை நேரடியாக அவரது தலையில் தாக்கியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்து மயக்கமடைந்தார்.
இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து, பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு அருகில் உள்ள ராஜாஜிநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து ராஜாஜிநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரத்தை ஆய்வு செய்துள்ளனர்.
