“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், மனைவி தன் மூலமாகத்தான் கர்ப்பமடைந்தாரா என்ற தேவையற்ற சந்தேகம் அபிலாஷுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்குமாறு அபிலாஷும் அவரது குடும்பத்தினரும் சுஷ்மிதாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக, கர்ப்பிணியான தனது மனைவி என்றும் பாராமல் அபிலாஷ் சுஷ்மிதாவை நாள் தோறும் சித்திரவதை செய்துள்ளார். பிறக்காத குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவர் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கணவனின் இந்தத் தொடர் கொடுமைகளையும், சந்தேகப் பேச்சுகளையும் தாங்க முடியாத சுஷ்மிதா, வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டு தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இந்தத் துயரச் சம்பவத்தால் நிலைகுலைந்துப் போன சுஷ்மிதாவின் தாய், ஊடகங்களிடம் கண்ணீருடன் பேசுகையில், “பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டாம்; ஏனென்றால், அவள் கட்டிக்கொள்ளும் கணவன் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட சாடிஸ்டாக மாறுவான் என்று யாருக்கும் தெரியாது” எனப் பெற்றோருக்கு வேதனையுடன் அறிவுரை வழங்கியுள்ளார்.