நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு, வெறும் 1,769 வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் காமராஜிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பல ஆண்டுகளாக எனக்கு வாக்களித்த மன்னார்குடி மக்களுக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த எனது கட்சிக்கும் பெருமைகளை மட்டுமே தேடித்தந்த ஒரு மன்னார்குடிகாரன் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. மன்னார்குடியின் வளர்ச்சிக்கு நான் செய்ததெல்லாம் என் மனதில் இருந்து செய்தவை; எந்த நிலையிலும் இந்த மண்ணின் வளர்ச்சிக்கு நான் என்றும் முழுமையாகத் துணை நிற்பேன்” என்று கண்கலங்கியபடி அவர் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலுவின் மகனான டிஆர்பி ராஜா, கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றவர். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலின் புகழ்பெற்ற ‘செங்கமலம்’ யானையைத் தன் குழந்தை போல் அரவணைத்துப் பராமரித்த இவர், ‘மின்னும் மன்னை’ என்ற உன்னத திட்டத்தின் கீழ் தொகுதிக்கு பல்வேறு நன்மைகளைச் செய்தார். புதிய புறவழிச்சாலை, நவீன பேருந்து நிலையம், வடிகால் வசதிகள், உயர்தர நூலகங்கள் மற்றும் மேம்பாலங்கள் எனப் பல உள்கட்டமைப்பு வசதிகளைத் தன் தொகுதிக்குப் பெற்றுத் தந்து, தான் அமைச்சராவதற்கு முன்னரே மற்ற அமைச்சர்களிடம் நயமாகப் பேசி மன்னார்குடியின் தேவைகளை நிறைவேற்றிய பெருமை இவருக்கு உண்டு.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நன்கு படித்தவருமான டிஆர்பி ராஜா, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் மாநிலத்தின் பொருளாதாரப் பாதையையே மாற்றியமைத்தார். இவரது பதவிக்காலத்தில் நடைபெற்ற ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ மூலம் சுமார் 14.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘ஃபர்ஸ்ட் சோலார்’ நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்தி உற்பத்தி ஆலையை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி வைத்ததுடன், வியட்நாமின் ‘வின்ஃபாஸ்ட்’, ‘ஓலா’, ‘ஏத்தர்’ போன்ற நிறுவனங்களை ஈர்த்துத் தமிழகத்தை இந்தியாவின் “மின்சார வாகனத் தலைநகரமாக” (EV Capital) மாற்றிக் காட்டினார்.
தொழில் வளர்ச்சியைச் சென்னை மற்றும் ஓசூருடன் நிறுத்தாமல், தென் தமிழக மாவட்டங்களுக்கும், இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் கொண்டு சேர்க்க ‘நியோ டைடல் பூங்காக்களை’ உருவாக்கினார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அரசின் நேரடி முதலீடுகளைப் பெற்றுத் தந்ததுடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பக் கொள்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தினார். இத்தகைய அசாத்திய உழைப்பைத் தந்த தமக்கு, இந்தத் தேர்தலில் 66,068 வாக்குகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முனைவர் (PhD) பட்டம் பெற்ற டிஆர்பி ராஜா, “என்னை இப்போது புரிந்து கொள்ள முடியாத ஒரு சிலர், வருங்காலத்திலாவது என் உழைப்பைப் புரிந்து கொள்வீர்கள்” என்று உருக்கமாகத் தன் வீடியோவை நிறைவு செய்துள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
