கோவாவிற்குச் சுற்றுலா வந்த நபர் ஒருவர், பாகா கடற்கரையில் பாராசெயிலிங் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். பாராசூட் மூலம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, படகுடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கயிறு எதிர்பாராதவிதமாகத் திடீரென அறுந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த நபர், சுமார் 15 அடி உயரத்தில் இருந்து நேராகக் கடலுக்குள் விழுந்தார். இந்தத் திடுக்கிடும் காட்சியைக் கண்டு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அலறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.
நல்லவேளையாக, அவர் உயிர் காக்கும் கவசம் (Life Jacket) அணிந்திருந்ததாலும், பாராசூட் மெதுவாகக் கீழே இறங்கியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடலில் விழுந்த அந்த நபரை, படகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அவருக்குப் பலத்த காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் அங்கு வந்திருந்தவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பாதுகாப்புக் குறைபாடுகளே இதற்குக் காரணம் என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Repeat with me – Never Ever do any adventure activity in India.
Yesterday while doing parasailing in Goa, a cable got snapped. pic.twitter.com/ZYAY3zWo04
— Suraj Kumar Talreja (@suritalreja) March 30, 2026
இந்த விபத்து குறித்து கோவா சுற்றுலாத்துறை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உபகரணங்களைச் சரியாகப் பராமரிக்காதது அல்லது ஊழியர்களின் அலட்சியம் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
