திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் கோவிலின் வருவாய் குறைவை ஈடுசெய்யும் நோக்கில், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த உத்தேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தங்கரத உலா கட்டணம் ரூ.2,500-லிருந்து ரூ.5,000 ஆகவும், சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளது. மேலும், மூலவர் அபிஷேகத்திற்கு இரு நபர்களுக்கு ரூ.10,000 எனவும், ஒன்பது கால பூஜைக்கு ரூ.6,500 எனவும் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதுதவிர, சாதாரண மற்றும் விழா நாட்களில் முறையே ரூ.500, ரூ.2,000 ஆக இருந்த அபிஷேக தரிசன கட்டணம் இனி அனைத்து நாட்களிலும் பொதுவான கட்டணமாக ரூ.2,500 ஆக உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில், வருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி கட்டணங்களை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு திட்டத்திற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் இருந்தால், பொதுமக்கள் வரும் 7-ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் கோவில் நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயணங்களை எளிய மக்களும் மேற்கொள்ளும் வகையில் இக்கட்டண உயர்வை கோவில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலான பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
