“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது கன்னிச் சதத்தைப் பதிவு செய்தபோது, கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், திலக் வர்மா வெறும் 45 பந்துகளில் 101 ரன்கள்* விளாசி அசத்தினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த சனத் ஜெயசூரியாவின் சாதனையை அவர் சமன் செய்தார். திலக் வர்மாவின் இந்த அபார ஆட்டத்தால் மும்பை அணி 199 ரன்கள் குவிந்தன.

திலக் வர்மா கடைசி பந்தில் தனது சதத்தை எட்டியபோது, டக்-அவுட்டில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா துள்ளிக்குதித்து, கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னதாக, மைதானத்தில் திலக் வர்மாவுடன் பேட்டிங் செய்தபோது ஹர்திக் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். திலக் வர்மாவின் இந்தச் சாதனையை ஒரு மூத்த சகோதரரைப் போல ஹர்திக் கொண்டாடியது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

   

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, “திலக் வர்மா மிகவும் திறமையானவர், அவருக்கு அதிக அறிவுரைகள் தேவையில்லை. அவர் சதம் அடித்தது அணிக்கும், தனிப்பட்ட முறையில் அவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று” எனப் பாராட்டித் தள்ளினார். தொடர் தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி மும்பை ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.