தமிழ் சினிமாவில் தனக்கென தனது தனித்துவமான படங்களின் மூலம் ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. ஆனால் அந்த படம் அவரின் தந்தையின் பெயரில் ரிலீஸ் ஆனது.
அதன் பின்னர் அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கின. ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைய அவர் நடிகராகவும் அறிமுகமானார்.

அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் ‘மெண்டல் மனதில்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்டு பாதியிலேயேக் கைவிடப்பட்ட மூன்று படங்கள் பற்றிப் பார்க்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு செல்வராகவன் விக்ரம் மற்றும் சுவாதியை வைத்து ‘சிந்துபாத்’என்ற படத்தைத் தொடங்கினார் . இதற்காக டார்ஜிலிங்கில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ஆனால் படம் அதன் பிறகு தொடரவில்லை. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சிம்புவை வைத்து ‘கான்’என்ற படத்தை அறிவித்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடத்திப் பின்னர் கைவிடப்பட்டது.
கடைசியாக சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ என்ற படத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷூட்டிங் நடந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. இந்த படங்கள் எல்லாம் இனிமேல் வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றுதான் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
