கோடை மற்றும் மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பதால், மக்கள் அதிலிருந்து தப்பிக்கப் பல்வேறு வழிகளைக் கையாள்கின்றனர். அதில் மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாகக் கருதப்படுவது கொசுவலை (Mosquito net) பயன்படுத்துவதாகும். கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் கொசுவலையையே நம்பியிருக்கிறார்கள். ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, கொசுவலை பயன்படுத்தினாலும் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்திப் பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு நபர் கொசுவலைக்குள் நிம்மதியாக ஆழமான உறக்கத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது. முதல் பார்வையில் அவர் கொசுக்களிடம் இருந்து தப்பிக்கச் சரியான பாதுகாப்புடன் தூங்குவது போல் தெரிந்தாலும், கேமரா அவரது கால்களை நோக்கி நகரும் போது பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கும் காட்சி ஒன்று வெளிப்படுகிறது. அந்த நபரின் கால்கள் கொசுவலையோடு ஒட்டிப் போயிருப்பதால், கொசுவலையின் வெளிப்பகுதியில் நூற்றுக்கணக்கான கொசுக்கள் ஒரு பெரும் படையே போலத் திரண்டு அவரது பாதங்களைச் சூழ்ந்து கொண்டுள்ளன.
எக்ஸ் (X) தளத்தில் ‘@Bio_comunidad’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த 20 வினாடி வீடியோவை இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதைப் பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் அரிப்பது போல் உள்ளது” என்றும், “இவ்வளவு கொசுக்கள் கடித்தும் அவரால் எப்படி இவ்வளவு நிம்மதியாகத் தூங்க முடிகிறது?” என்றும் தங்களின் அதிர்ச்சியையும் கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
