தமிழக மக்கள் பயனடையும் விதமாக ஏராளமான திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம்தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தற்போது செய்து வருகின்றது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி கடந்த முறை நிராகரிக்கப்பட்டவர்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
