“எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம்!”.. திடீரென பேட்டியில் கர்ஜித்த திருமாவளவன்… பின்னணியில் இருக்கும் அந்த ரகசியம்..!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருப்பதை ஆரோக்கியமான அரசியலாகக் கருதவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேர் திடீரென தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடையே இந்தச் சம்பவம் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துத் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் அண்மையில் அரங்கேறிய திமுக – விசிக தொண்டர்கள் இடையேயான மோதல் சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும், அது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இனி நடக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தவெகவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, தவெக அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து விசிக ஆதரவளிக்கும் முடிவை எடுத்தது. எந்தச் சூழலிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் கொடுக்காது. அதேநேரம், விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக் கூடாது” என்றும் சுட்டிக்காட்டினார்.

   

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், அதிமுகவுடன் சேர்ந்தே தவெக ஆட்சியமைக்க முயன்றிருக்கும் என்றும், அதிமுக சந்தித்து வரும் இந்த நெருக்கடியைத் தாம் தேர்தலுக்கு முன்பே சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டார். மேலும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுப்பது ஆட்சிக்கு முழுப் பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்ததால் தான், தவெக அமைச்சரவையில் தங்களை இடம்பெற வலியுறுத்தியதாகவும், அதனை ஏற்றுக்கொண்டதால் தான் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகவும் திருமாவளவன் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.