சட்டப்பேரவையில் நடந்த அந்த ஒரு செய்கை…. முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய திருமாவளவனின் எக்ஸ் பதிவு… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை அரசியலரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மிசா சட்டப் பிரிவு குறித்துப் பேசுகையில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் முதல்வர் விஜய்யின் உடல்மொழி அமைந்திருந்ததாக திமுக மற்றும் இடதுசாரித் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு “எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டதல்ல” என்று முதல்வர் விஜய் விளக்கமளித்த போதிலும், இந்தச் செயல் மனித மாண்புகளுக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் விமர்சனங்கள் வேறு, ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் தனிப்பட்ட முறையிலான அணுகுமுறைகள் வேறு என்று சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி, அதிகாரம் அல்லது பொருளாதாரத்தில் எளிய பின்னணியைக் கொண்ட மனிதர்களாக இருந்தாலும், அவர்களின் தன்மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவது நாகரிகமான அரசியலாகாது என்றும், வயதில் மூத்தோரை மதிப்பது சமூகத்தின் மிக உயர்ந்த பண்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், வருங்காலங்களில் தனது உடல்மொழியிலும் வார்த்தைப் பிரயோகங்களிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

   

மேலும், சட்டமன்ற விவாதத்தின் போது சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் பிழையானவை என்றும் திருமாவளவன் சாடியுள்ளார். மிசா காலத்தில் அப்போதைய திமுக தலைவர்கள் சந்தித்த கொடூரமான அரச பயங்கரவாதமும் ஒடுக்குமுறைகளும் நாடு அறிந்த உண்மையாகும். அவ்வாறிருக்க, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் தவறான தகவல்களைப் பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என்றும், அந்தப் பதிவை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.