தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினர் பலரும் முக்கிய கட்சியுடன் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமாகா உடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜி கே வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தார். அதன் பிறகு பேசிய ஜிகே வாசன், தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி ஒன்றாக இணைந்தது வருங்காலங்களில் அரசியல் களத்திற்கு வசந்தகாலமாக இருக்கும். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள், இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என்று அவர் தெரிவித்துள்ளார்
