“வழக்கை வாபஸ் வாங்க மிரட்டுறாங்க…!” – வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த… அமைச்சர் மரிய வில்சனின்… சகோதரர் போட்ட பரபரப்பு குண்டு…!!

By Swetha on ஆடி 5, 2026

Spread the love

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து, அவரையும அவரது மனைவியையும் கட்டையால் தாக்கியதாகக் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அண்மையில் வெளியாகின. இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பட்ஜெட் தயாரிப்பு ஆலோசனைகளைக் காரணம் காட்டி அமைச்சர் ஆஜராகாததால், வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதி வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்தச் சூழலில், வழக்கை வாபஸ் பெறக் கோரி அமைச்சர் தரப்பில் இருந்து தங்களுக்குத் தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக மரிய கிளோத் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணன்-தம்பி இடையேயான அறக்கட்டளை நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் மூலமாகத் தங்களுக்குக் கடுமையான தொல்லைகளும், பொய் வழக்குகளும் முடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

   

உயிருக்கு ஆபத்து உள்ளதால் புதுச்சேரியில் பாதுகாப்பு இன்றி தமிழகத்திலும், வெளிநாட்டிலும் தஞ்சம் புகுந்து மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறும் மரிய கிளோத், இத்தனை இன்னல்களையும் தாண்டி வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளார். எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் நீதித்துறையின் மீதுள்ள முழு நம்பிக்கையுடன் சட்டப்பூர்வமாகப் போராடி, தங்களுக்குரிய நீதியைப் பெறுவோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.