சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் புதிய உறுப்பினராக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிரபல ரோகிணி திரையரங்கின் உரிமையாளருமான ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றப் பெருவெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், மாநிலத்தின் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் வாரியங்களைச் சீரமைத்து வருகிறார். அந்த வகையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப் பயன்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான அனுமதிகளை முறைப்படுத்தும் மிக முக்கியமான சிஎம்டிஏ அமைப்பின் பொறுப்பு தற்போது ரேவந்த் சரணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஏற்கனவே இருந்த பொறுப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திறமையாளர்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி, சிறுபான்மை ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தகத்தக்கது. அந்த வரிசையில், தற்போது சிஎம்டிஏ உறுப்பினராகத் தேர்வாகியுள்ள ரேவந்த் சரண், தமக்கு இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ரோகிணி திரையரங்கின் உரிமையாளரான ரேவந்த் சரண், முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து, 2024-இல் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தவெகவில் இணைந்தவர் ஆவார். நடந்து முடிந்த தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது தவெகவின் சென்னை மண்டல வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வினோஜ் பி. செல்வத்தின் சகோதரர்தான் இந்த ரேவந்த் சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் சிஎம்டிஏ அமைப்பானது சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி ஆகிய 4 மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களின் 12 நகராட்சிகளை உள்ளடக்கிய விரிவான எல்லைகளைக் கொண்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் நிதிநிலை சார்ந்த பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த இந்த அமைப்பை, புதிய நிர்வாகத்தின் மூலம் திறம்பட வழிநடத்தி சென்னையின் புறநகர் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ரேவந்த் சரண் புதிய வேகத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
