கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லை பொம்மசந்திரா பகுதியைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி(35) சீட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தார். அந்த வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பண தேவை அதிகரித்தது. இதனால் வசதி படைத்தவர்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி கித்தனஹள்ளிக்குச் சென்ற ரவி பிரசாத் ரெட்டி, ஓட்டல் உரிமையாளர் மாதேஷிடம் பணம் கேட்டார். மறுத்ததால் ஆத்திரமடைந்து அவரை அடித்துக் கொன்றார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரவி பிரசாத்தை தேடி வந்த நிலையில் நவம்பர் 6-ஆம் தேதி தொழிலதிபர் பாலப்பா ரெட்டியை ரவி கடத்தினார். பின்னர் செல்போனில் அவரது குடும்பத்திடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார். பணம் கிடைக்காததால் 2 நாட்களுக்குப் பிறகு தொழிலதிபரை கொன்று சானமாவு வனத்தில் உடலை வீசினார்.
விசாரணையில் சிசிடிவி காட்சிகளால் ரவி பிரசாத் ரெட்டி கொலைகளுக்கு காரணம் என உறுதியானது. அவர் கர்நாடகாவில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை கர்நாடக போலீஸ் அவரை கைது செய்து விசாரணைக்காக ஓசூர் அனுப்பினர்.
பொம்மனஹள்ளி மயானம் அருகே சென்ற போது ரவி பிரசாத் ரெட்டி போலீசாரை தாக்கி தப்ப முயன்றார். இதனால் தலைமை காவலர் அசோக் காயமடைந்தார்.உடனே துப்பாக்கியால் ரவி பிரசாத்தின் 2 கால்களிலும் சுட்டனர். படுகாயமடைந்த ரவி பிரசாத் ரெட்டி ரத்தத்தில் சரிந்தார். அவரை ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
