சென்னையில் பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த 22 வயது பெண் பொறியாளருக்கு நேர்ந்த இந்தத் துயரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக திரும்பிய 22 வயது பெண் பொறியாளர், நேற்று அதிகாலை புரசைவாக்கம் தானா தெருவில் தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் யாதவ் (35) என்பவர், எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணைக் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் உடனடியாக விரைந்து வந்து பிரமோத் யாதவை மடக்கிப் பிடித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
