அமெரிக்க ராணுவம் ஈரான் நாட்டின் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள பதுங்கு குழிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏவுகணைத் தளங்கள் மீது, சுமார் 5,000 பவுண்டு (2,268 கிலோ) எடையுள்ள சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோமுஸ் (Hormuz) ஜலசந்திக்கு அருகிலுள்ள இந்தத் தளங்கள், சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கும் எண்ணெய் விநியோகத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட GBU-72 வகை குண்டுகள், நிலத்திற்கு அடியில் ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கும் அல்லது சிமெண்ட் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருக்கும் இலக்குகளை ஊடுருவிச் சென்று அழிக்கும் திறன் கொண்டவை. கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வீசப்பட்ட 30,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை விட இவை சிறியவை என்றாலும், தற்போதைய போர்க்களச் சூழலில் இவை மிகவும் அழிவுகரமானவை எனக் கருதப்படுகிறது. ஒரு குண்டின் மதிப்பு சுமார் 2.88 லட்சம் டாலர்கள் (சுமார் ₹2.4 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போருக்குப் பதிலடியாக, உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை ஈரான் சமீபத்தில் மூடியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அந்தப் பாதையை மீண்டும் திறக்கும் முயற்சியின் முதல் முக்கிய நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
