இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தான் கொல்லப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரானின் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும், சமீபத்திய காட்சிகளில் தெரிவது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உருவம் என்றும் பரவிய தகவல்களைத் தொடர்ந்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடித்தபடி நேதன்யாகு பேசிய வீடியோ வைரலானது. அதில் அவர் நகைச்சுவையாக, “நான் காபிக்காகத்தான் ஏங்குகிறேன் (I am dying for coffee)” என்று கூறி தனது மரணச் செய்தியை கிண்டல் செய்தார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான வீடியோக்களில் விரல்கள் சரியாக இருக்காது என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தனது ஐந்து விரல்களையும் கேமராவில் எண்ணிக் காட்டி தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கீயுடன் (Mike Huckabee) இணைந்து மற்றொரு வீடியோவையும் நேதன்யாகு பகிர்ந்துள்ளார். அதில் தூதருடன் நடந்து சென்றபடி, “ஆம், நான் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், நேதன்யாகுவின் இந்த அடுத்தடுத்த வீடியோக்கள் அவரது பாதுகாப்பு குறித்த வதந்திகளுக்குப் பதிலடியாக அமைந்துள்ளன.
