திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவர் அபிஷேக், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகில் இருந்த ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரி நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும், கிராம மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று (மே 20) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மறைந்த மாணவர் அபிஷேக் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவர் அபிஷேக் இன்று தங்களோடு இல்லை என்ற செய்தி, அவரது பெற்றோரையும் பள்ளி ஆசிரியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
