சங்கடகர சதுர்த்தி, பஞ்சமி, அஷ்டமி போன்ற திதிகள் விநாயக பெருமான், வாராஹி அம்மன், கால பைரவர் போன்ற கடவுள்களுக்கு உகந்ததாகும். அதே போல் பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி திதி ஆகும். இந்த ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். அவை என்ன? ஏகாதசி எப்படி பிறந்தது என்ற கதையை இனி பார்ப்போம்.
முரண் என்கிற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் பாடாய்படுத்தி வந்துள்ளான். அவனது கொடுமைகளை தாங்க முடியாத முனிவர்கள் மற்றும் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு முரணை அழிப்பதற்காக கிளம்பினார். அவனோடு கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேல் யுத்தம் செய்தார் மகாவிஷ்ணு. யுத்தம் செய்த களைப்பில் ஒரு குகையில் சென்று ஓய்வெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது மகாவிஷ்ணு உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வேலையில் அவரை கொன்று விட வேண்டும் என்று முரண் அங்கே சென்றான்.

அப்போது உறங்கிக் கொண்டிருந்த மகாவிஷ்ணு உடம்பிலிருந்து வெளிவந்த சக்தி பிழம்பானது முரணை எரித்துக் கொன்றது. தூக்கத்தில் இருந்து விழித்த மகாவிஷ்ணு தன்னுள் இருந்து வெளிவந்த சக்தி தீப்பிழம்பை ஏகாதசி என்று நாமமிட்டு அந்த ஏகாதசி அன்று தன்னை வழிபடுபவர்களுக்கு சகல நன்மைகளையும் வரமாக தருவேன் என்று கூறி அந்த ஏகாதசி திதியை தன்னுள் ஏற்றுக்கொண்டார் மகாவிஷ்ணு.
அதனால் ஏகாதசி தினத்தன்று பெருமாளை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். மாதம்தோறும் வரும் ஏகாதசியில் பெருமாளை எப்படி விரதம் இருந்து வழிபடுவது என்பதை பார்ப்போம். வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 2 ஏகாதசி திதிகள் நிகழும்.

ஏகாதசி தினத்தன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும். முழுதாக சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஓம் நமோ நாராயணா என்பதை பாராயணம் செய்து விரதம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து பூஜைகள் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
பின்னர் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசிமாலை சாற்றி பெருமாளை வழிபடுவது சகல நன்மைகளையும் தரும். மேலும் ஏகாதசி தினத்தன்று விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால் மோட்சம் கிடைக்கும். அப்படி விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க முடியாதவர்கள் ஒலி வடிவமாக வீட்டில் ஒலிக்க செய்யலாம். இந்த சிறப்பு வாய்ந்த ஏகாதசி தினத்தன்று பெருமாளை விரதம் இருந்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் மறு பிறவி என்பதை கிடையாது என்பது ஐதீகம்.
