தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் நடிகை மாயாவிற்கு விக்கி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். நடிகை மாயா அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மாயாவின் மகன் விக்னேஷ், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விக்னேஷ் மீது, பல குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்தசில ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில், விக்னேஷ் தனியாக வசித்து வந்துள்ளார். 2020-ல் மர்ம கும்பலால் விக்னேஷ் வெட்டப்பட்டு படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்திருந்தார். மேலும், இவருக்கு மதுப் பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் தனது மகன் குறித்து உருக்கமாக பேசிய நடிகை மாயா கூறியதாவது, ‘என் மகன் மீது பல பொய் வழக்குகளை போலீசார் போட்டுள்ளனர். கடைசியில் என் மகன் மீது குண்டாஸ் வழக்கு போட்டு ஒரு வருஷம் ஜெயிலில் அடைத்தனர். அவன் வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே பழைய வழக்கு ஒன்றில் மீண்டும் கைது செய்யப்போவதாக கூறி வந்தனர்.

இந்த கவலையால் 3 நாளாக குடித்துக் கொண்டே இருந்த என் மகன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தனா? இல்லை கூட இருந்தவங்க ஏதாவது பண்ணிட்டாங்களானு தெரியல. என் மகன் கண்ணை எலி கடிச்ச காயம் இருக்கு. எப்போ இறந்தான்னே தெரியலை. என்று உருக்கமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
