ஜெயம் ரவி – ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வரை சென்றனர். இதற்கிடையில், ரவி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், நேற்று கெனிஷா வெளியிட்ட வீடியோவில், தான் ரவியின் குடும்பத்தைப் பிரிக்கவில்லை என்றும், அவரை முழு சுதந்திரத்துடன் வழியனுப்பி வைத்துவிட்டு சென்னையிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதாகவும் கூறி அதிர்ச்சி தந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்த்தி ரவி, “தூங்கும் தாய் சிங்கத்தை எழுப்ப வேண்டாம்; என் குழந்தைகளையும் கண்ணியத்தையும் காக்க உண்மைகளோடு உலகை எதிர்கொள்வேன்” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) இன்று செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். தான் மிகவும் கஷ்டப்பட்டு, 104 டிகிரி காய்ச்சலிலும் நடித்து இந்த நிலைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒரு ‘இட்லி நடிகை’ தன்னைப்பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த நடிகையால் தன் குடும்பமே நாசமாகப் போகவிருந்ததாக மூன்று சீனியர் நடிகர்கள் தன்னிடம் எச்சரித்ததாகவும் ரவி செய்தியாளர்களிடம் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ரவி, தனக்கு ரத்த வாந்தி வந்ததாகவும், தன்னைத் தங்கள் பேச்சைக் கேட்க வைக்க ‘பிளாக் மேஜிக்’ (பில்லி சூனியம்) செய்யப்பட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். வீட்டில் தனக்கு அடிப்படை மரியாதை கூட கிடைக்கவில்லை என்றும், வேலை முடிந்து வந்தால் நிம்மதியே இல்லை என்றும் வேதனைப்பட்டுள்ளார். மேலும், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் போலியான ஆதாரங்களை உருவாக்கித் தன் இமேஜை அழிக்கப் பார்ப்பதாகவும், ஆனால் தன்னிடம் உண்மையான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறிய அவர், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் தான் நிம்மதியாக இருந்ததாகத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
