கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் காலங்களில் உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சி அளிக்க இது பெரிதும் உதவுகிறது. நண்டில் உள்ள உயர்தர புரோட்டீன் திசுக்களைச் சீரமைக்க உதவுவதுடன், அதில் நிறைந்துள்ள ஜிங்க், செலினியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
சளி மற்றும் இருமலுக்கு நண்டு ரசம் ஒரு இயற்கை மருந்தாகச் செயல்படுவதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. இது குறித்து உணவியல் நிபுணர் Dr. பத்மினி கூறுகையில், நண்டில் உள்ள சத்துக்கள் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் திறனை உடலுக்கு அளிப்பதாகக் குறிப்பிடுகிறார். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய மசாலாப் பொருட்கள் தொண்டை வலி மற்றும் கரகரப்பை உடனடியாகச் சரிசெய்ய உதவுகின்றன. மேலும், காய்ச்சல் நேரங்களில் நாவிற்குச் சுவையூட்டி செரிமானத்தை எளிதாக்கும் ஒரு சிறந்த உணவாகவும் இது திகழ்கிறது.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், நண்டு ரசம் சளியை நேரடியாகக் குணப்படுத்தும் என்பதற்கு நேரடிச் சான்றுகள் இல்லையென்றாலும், அது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி உடல் விரைவாகக் குணமடைய மறைமுகமாக உதவுகிறது. குறிப்பாக, சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து சுவாசத்தை எளிதாக்கும் பண்பு இதற்கு உண்டு. இருப்பினும், நண்டு சிலருக்கு அலர்ஜியை (Allergy) ஏற்படுத்தக்கூடும் என்பதால், அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் முதல்முறை சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நண்டு ரசம் உடலுக்கு அதிக வெப்பத்தைத் தரக்கூடியது என்பதால், ஏற்கனவே உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இதனை மிதமான அளவில் உட்கொள்வது நல்லது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய இந்த “நண்டு ரச வைத்தியம்” இன்றும் ஒரு சிறந்த இயற்கை தீர்வாகத் தொடர்கிறது. பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் உணவியல் நிபுணர் வழங்கிய இந்த ஆலோசனைகள், சளி மற்றும் இருமல் காலங்களில் நண்டு ரசம் எவ்வாறு உடலுக்குப் பாதுகாப்பாக அமைகிறது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.
