கிழக்கு லண்டனைச் சேர்ந்த 25 வயதான பார்த்திமாஸ் எஹிமெரே என்ற நபர், 12 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததை “இதுவரை இல்லாத சிறந்த உடலுறவு” என்று மற்றொரு குற்றவாளியுடன் பகிர்ந்துகொண்ட குறுஞ்செய்தியில் வர்ணித்த அதிர்ச்சியூட்டும் உண்மை நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், தனது 19 வயதிலிருந்தே, இவர் ஸ்னாப்சாட் சமூக ஊடகத் தளம் மூலமாக 12 முதல் 16 வயதுக்குட்பட்ட ஏழு சிறுவர்களைத் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாகச் சுரண்டியுள்ளார். இவர்களில் 12 வயதுடைய இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கொடூரமும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஸ்னேர்ஸ்ப்ரூக் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ் பிரவுன் கே.சி. பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை முன்வைத்தார். எஹிமெரே பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனைச் சர்ரேயில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, அங்கு ஒரு மரக்கிளையின் மீது வைத்துப் பாலுறவில் ஈடுபடக் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இவரது கைபேசியைப் பறிமுதல் செய்து சோதித்த புலனாய்வாளர்கள், அதில் 1,600-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களைக் கண்டறிந்துள்ளனர்.
ஸ்னாப்சாட்டில் இளம் பதின்வயது சிறுவர்களிடம் பாலியல் படங்களைக் கேட்டு இவர் பரவலாக விளம்பரம் செய்ததும், அவர்களுக்கு ஆபாசப் படங்களை விநியோகித்து இழிவான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களையும் அருவருப்பான படங்களையும் விநியோகித்து, அவர்களுக்கு இழைத்த பாலியல் செயல்களை மீண்டும் செய்து காட்டுமாறு அவர் கோரியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 13 வயதுக்குட்பட்ட குழந்தையை மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்தது, குழந்தையைப் பாலியல் நடவடிக்கைக்குத் தூண்டியது மற்றும் பாலியல் ரீதியிலான தாக்குதல் உள்ளிட்ட 47 சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக பார்த்திமாஸ் எஹிமெரே குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த கொடூரக் குற்றங்களுக்காக அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவர் தனது வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
