தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் (தவெக) 110 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அமோக முன்னிலை குறித்து தவெக தலைவர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது விஜய்க்கு கிடைத்த சரித்திர வெற்றி என்றும், ஒரு தந்தையாக தான் மிகுந்த பெருமை கொள்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழக முதல்வராக வருவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை விஜயிடம் இருந்ததாகவும், அந்த தன்னம்பிக்கையை தான் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்த ஒரு கூட்டணியும் இன்றி சொந்தக் காலில் நின்று தேர்தலை எதிர்கொண்ட விஜய்யின் துணிச்சலே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என எஸ்.ஏ.சந்திரசேகர் புகழ்ந்துள்ளார். மக்கள் விஜய்யை ஒரு தலைவராக மட்டும் பார்க்காமல், தங்களில் ஒருவராகப் பார்த்ததால்தான் இந்த ஆதரவு கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், இதற்காகத் தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
