விநாடிக்கு 2,831 லிட்டர் தண்ணீரை உள்வாங்கும்…! நெல்லை அதிசய கிணறுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா…?

By Devi Ramu on மார்கழி 12, 2025

Spread the love

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் ஒரு ‘அதிசயக் கிணறு’, விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் தண்ணீரை உள்வாங்கும் அபார திறன் கொண்டதாக உள்ளது. கருமேனியாறு கால்வாயில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் எவ்வளவு வந்தாலும், கிணறு நிரம்பாமல் உள்வாங்கிக் கொண்டே இருப்பது இதன் தனிச்சிறப்பு.

இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பெருகுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கிணற்றின் அறிவியல் பின்னணியை அறிந்துகொள்ள, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சென்னை ஐஐடி பேராசிரியர்களை வரவழைத்து ஆய்வு செய்யக் கோரியது.

   

மூன்று மாத ஆய்வுக்குப் பிறகு, ஆய்வாளர்கள் சில உண்மைகளைக் கண்டறிந்தனர். இந்தக் கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளன. மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன், பாறைகளுடன் வேதிவினை புரிவதால், காலப்போக்கில் பெரிய துவாரங்கள் மற்றும் பூமிக்கடியில் குகைகள் உருவாகியுள்ளன.

   

இந்தக் குகைகள் மற்றும் இயற்கையான நிலத்தடி நீர்க் கால்வாய் அமைப்பு காரணமாக, கிணறு அதிக நீரை உள்வாங்கி, அதைச் சேமித்து வைத்து, நிலத்தடி நீர் மட்டங்களுக்கு விரைவாக அனுப்புகிறது. எனவே, ஆயன்குளம் கிணறு என்பது சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த நிலத்திற்கு அடியில் உள்ள ஆறு போன்ற அமைப்பாக மாறியுள்ளது என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.